search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் வெயில்"

    • மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை .
    • அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு.

    நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் சுட்டெரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்த வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நாட்களில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும். தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.

    மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதற்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை வானிலை மையம்

    இதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்துக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும். இந்த நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரியும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 5 முதல் 8 டிகிரியும் வெப்பநிலை அதிகரிக்கும்.

    மேலும், தமிழ்நாட்டில் 95 டிகிரி முதல் 107 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 80 முதல் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி வெப்பநிலை பதிவாகிஉள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் வழக்கத்தை விட வெயில் வெளுத்தி வாங்கி வருகிறது. இந்த வெயிலின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் சுருண்டு விழுந்து 9 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் வெயில் தாக்கத்தால் இறந்தார். இதனால் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழலில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பாலக்காட்டில் வெப்பநிலை 106 டிகிரியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வெப்ப அலையின்போது சூரிய ஓளி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • திடீர் மழை காரணமாக ஒரு கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது.
    • ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக  கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 101 டிகிரி வெயில் அளவு பதிவானதும் குறிப்பிடத் தக்கதாகும். தற்போது தமிழகத்தில் சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி கடந்த மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வழக்கத்தை விட அதிக அளவில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி கடும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் கடலூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறு, இளநீர், கரும்பு ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைக்க முயன்றாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் வெயில் காரணமாக முகத்தில் துணி கட்டிக் கொண்டும், குடைப்பிடித்த படியும் சென்றதையும் காணமுடிந்தது.

    இந்த நிலையில் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தினால் பொதுமக்கள் இரவு தூக்கம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருவதோடு முதியவர்களுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்பும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் வெயில் மற்றும் அனல் காற்று அதிகரித்து வரும் காரணங்கள் குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து தற்போது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகின்றது. மேலும் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததை காண முடிந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மோக்கா புயல் உருவாகி மியான்மரில் கரையை கடந்தது. இதன் காரணமாக காற்றில் உள்ள ஈரப்பதம் பெருமளவில் குறைந்து தற்போது மிக குறைந்த அளவில் ஈரப்பதற்காற்று கடல் பகுதியில் வீசி வருகின்றது. மேலும் மேற்கு திசையில் இருந்து காற்று தீவிரமாக வீசி வருகின்றது. இந்த காற்றானது வறண்ட காற்றாகும். இந்த காற்று வங்க கடலில் இருந்து வீசும் நேரத்தில் எப்போதும் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    ஆனால் தற்போது மேற்கு திசையிலிருந்து வரக்கூடிய காற்று அதி கரித்து வரும் நிலையில் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சற்று காலதாமதமாக வருவதால் வெப்ப சலனம் அதிகரித்து அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. ஆனால் நேற்று கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சரியான நேரத்தில் உள்ளே வந்ததால் நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் இருந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயிலாக குறைந்து காணப்பட்டது. இன்று முதல் 3நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசக்கூடிய நிலையில் தான் தற்போது வரை உள்ளது. இதன் பிறகு வானிலை மாற்றம் காரணமாக எதுவாயினும் நடை பெறலாம். ஆகையால் பொது மக்கள் மற்றும் முதியவர்கள் அனல் காற்று மற்றும் சுட்டெ ரிக்கும் வெயில் காரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தர்ப்பூசணி-பழஜூஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் வரை 30 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு பதிவான வெப்பத்தின் அளவு தற்போது 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த அளவு வெயிலையே பொதுமக்களால் தாங்க முடியவில்லை. பங்குனி தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிப்பதால் சித்திரை மாதத்தில் இதை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும், பகல் நேரத்தில் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் தற்போதிருந்தே வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.

    மதுரையில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலை மக்கள் சமாளிப்பதற்காக தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் மதுரைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பொதுமக்கள் அதிகளிவில் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.

    • பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறையும் நீர்மட்டத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய், வீராக சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த இரு கண்மாயை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் தென்னை, நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கி்றது. அறுவடை முடித்தவர்கள் முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய பணியினை தொடங்கு வதற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது. தற்போது முதல் போக நெல் நடவு செய்வதற்காக நெல் நாற்றங்கால் பாவ போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நாற்றங்கால் பணியை தொடங்கி உள்ளோம்.

    மேலும் கண்மாயில் தற்போது 20 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டால் நீர்மட்டம் வெகு வாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை யுடன் கூறினர்.

    ×